நெல்லை – சென்னை ஜனவரி 30, 2022

தேர்தல் பரப்புரை செய்யும் போது நாள் முழுதும் ஓர் பாடலை ஒலிக்கச் செய்தார்கள், அதை ஊர் முழுதும் போஸ்டர்கள், கடைகள் முகப்புகளில் லைட் போர்டுகளை மாட்டித் தந்தார்கள். அடித்துச் சேர்த்த பணத்தை வாரி இறைத்து வெற்றியை தங்களுடையதாக்கி பார்த்தீர்களா வென்று விட்டோம் என்று புளங்காகிதம் அடைந்தார்கள்.

இறைத்ததை எடுக்க வேண்டுமே அதுதான் செயல் தலைவராக இருந்தவர் தலைமைப் பொறுப்பை ஏற்றார் போல் எடுத்து இறைத்தவர் எல்லாம் அவரவர் பங்குக்கு வசூலில் ஈடுபட்டு போட்ட முதலை வட்டியுடன் எடுக்க முனைந்ததால் இன்றைக்கு வழக்கு பாய்ந்து உள்ளது.

தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு (2021 தேர்தலில் திமுக வென்ற ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்) நில அபகரிப்பு புகார் ஒன்றில் சிக்கி இந்த ஆண்டின் முதல் கணக்கை தொடங்கி வைத்திருக்கிறார்.

சபாநாயகர் அப்பாவு தனது 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முறைகேடாக அபகரித்து விட்டார் என நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் தாமோதரன் என்பவர் தனது 10 சென்ட் நிலத்தை பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம் ஆகியோர் மூலமாக அப்பாவு முறைகேடாக அபகரித்து விட்டார் என்று தொடர்ந்த வழக்கில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர் மேலும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்படி உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.

உயர்நீதி மன்றம் – மதுரை கிளை (கோப்புப் படம்)

இந்நிலையில் அப்பாவு தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடந்தது அப்போது தாமோதரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் செல்வம் தெரிவித்தது என்னவென்றால் “அப்பாவு இப்போது தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர் மேலும் அவர் ராதாபுரம் தொகுதியின் உறுப்பினர் எனவே எம் எல் ஏ மற்றும் எம் பி க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மட்டுமே அதிகாரம் உடையது” என்றார். எனவே அவரது வாதத்தினை அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு மாற்றப்பட்டது.

சென்னை உயர்நீதி மன்றம் (கோப்புப் படம்)

தற்போது சிறப்பு நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு நிர்மல் குமார் அவர்களின் விசாரணைக்கு வந்தது அதைத் தொடர்ந்து நீதிபதி அவர்கள் நெல்லை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் இன்னும் இரண்டு வார அவகாசத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு விசாரணையை மேற்கொண்டு இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்.

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர் எவராக இருந்தாலும் ஊழல் செய்வது அல்லது அதற்கு இணையாக முறைகேடுகள் செய்தல் குறித்து புகார்கள் வந்தால் நான் அமைதியாக இருந்து விடுவேன் என்று நினைக்க வேண்டாம் எனது நடவடிக்கை மிகக் கடுமையாக இருக்கும் என்று முதல்வர் ஆட்சியில் அமர்ந்த பின் சொன்னது நினைவிற்கு வருகிறது.

இரண்டு மலைகளுக்கு இடையில் கதிரொளி வீசி பிரகாசிக்கும் சூரியனை சின்னமாக கொண்டு சிறிது காலமே ஆட்சி செய்த அறிஞர் அண்ணாவின் வங்கிக் கணக்கில் சொற்பமான தொகையே எஞ்சி இருந்ததாக அறியப்படுகிறது. ஆனால் அவர் வழி வந்ததாக சொல்லிக்கொள்ளும் இவர்கள் அந்த மலைகளின் அளவிற்கு முறைகேடுகள் செய்து அதற்குள் அவருடைய தன்னிகரற்ற புகழை மறையும்படி செய்து வருகிறார்கள் என்றால் மிகையாகாது.

https://tamil.asianetnews.com/tamilnadu/highcourt-orders-to-file-a-report-in-the-land-grab-case-against-appavu-r6fbo0 https://tamil.indianexpress.com/tamilnadu/tn-assembly-speaker-appavu-land-grabbing-case-chennai-high-court-403527/