சென்னை ஜூன் 25, 2022

நாட்டையும் நாட்டின் முதல் குடிமகன் ஆகிய ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், நீதிபதிகள், மாநில முதல்வர்கள் அமைச்சர்கள் முதல் கடைக்கோடி மக்கள் சாமானியர் வரை முறையே பாதுகாப்பு அளிப்பது இராணுவமும், சிறப்புக் காவல் படைகளும் அடுத்தகட்ட பாதுகாப்புகளில் ஈடுபடுவது மாநில முதல்வர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை தான்.

சமூக விரோத செயல்களையும், கொலை, கொள்ளை என இன்ன பிற குற்றங்களை நிகழாமல் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் காவல் துறையினரின் தொண்டு அளப்பரியது. மாதா மாதம் ஊதியம் பெற்றாலும் நேரம் காலம் என எதையும் இத்துறையில் கணக்கில் எடுத்துக் கொள்ள இயலாது. எங்கே எப்போது என்ன நிகழ்ந்தாலும் சடுதியில் அங்கே சென்று சேர்ந்து என்ன எதுவென்று விசாரணையை துவக்க வேண்டும். அரசியல் கூட்டங்கள், பொதுமக்கள் கூடும் இறைவழிபாடு திருவிழாக்கள் தனி நபர் அச்சுறுத்தல் எனில் பாதிக்கப்பட்டவருக்கு பாதுகாப்பு அளித்தல் என காவலர்களின் பணி காலவரையற்றது போல இது தான் என்றும் எம் பணி என்றும் ஒதுங்கிப் போய் விடமுடியாது.

அப்படி இடைவிடாது பணிபுரியும் காவல் துறையினரின் பலர் பல வேளைகளில் மன அழுத்தம் தாங்காமல் அதை குற்றச் செயலில் ஈடுபட்டு அல்லது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்படும் நபர்களை விசாரணை செய்கையில் அந்த அழுத்தம் வெளிப்பட்டு தாக்குதல் நடப்பதும் உண்டு அவ்வேளைகளில் அந்த நபர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து அது பெரும் சர்ச்சைகளை உண்டாக்கி மனித உரிமை ஆணையம் வரையும் சென்று சம்பந்தப்பட்ட காவலர்களை தற்காலிக பணி நீக்கம் அல்லது நிரந்தர பணிநீக்கம், பணி உயர்வை நிறுத்தி வைத்தல் இன்னும் சொல்லப் போனால் பணி மாற்றம் செய்யப்படுவதும் உண்டு.

சரி இந்த மன அழுத்தம் எதனால் காவலர்களுக்கு உண்டாகிறது அதீத பனிச்சுமை, உயரதிகாரிகளின் எள்ளல் பேச்சு, அவர்களின் வீட்டுப் பணிகளை செய்து வருதல், முறையான பதவி உயர்வு தரப்படாமல் காக்க வைப்பது, அரசியல்வாதிகளின் அதிகாரப் போக்கு என பெரும் பட்டியல் உள்ளது.

இங்கே எல்லா பணிகளுக்கும் சங்கங்கள் உள்ளது (கணிணி மென்பொறியாளர்கள் போன்ற பணியாளர்கள் சங்கங்கள் வைத்துக் கொள்ள நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை), பெரும் தொழிற்சாலைகள், மருத்துவர்கள், செவிலியர்கள், துறை சாரா பணியாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், கனரக வாகன ஓட்டுனர்கள், ஓட்டுனர் உதவியாளர்கள், லாரி, வேன், ஆட்டோ, அரசு மற்றும் தனியார் பேருந்து பணியாளர்கள், இரயில்வே துறை பணியாளர்கள், தையற்கலைஞர், சினிமா துறை என பல பணிகளுக்கு, தொழில்களுக்கு சங்கங்கள் உண்டு வாரியங்கள் உண்டு. இன்னும் சொல்லப்போனால் சாலை ஓரம் நடைபாதையில் கடைவிரித்து வியாபாரம் செய்யும் சிறு வணிகர்களுக்கும் சங்கங்கள் பதிவு செய்து அதன் மூலம் பயனடைதலோ அல்லது சட்டரீதியான போராட்டங்களோ முன்னெடுக்க வழிவகை செய்யும் பல தரப்பட்ட சங்கங்கள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இதில் மேற்சொன்ன பட்டியலில் உள்ள பணியாளர்கள் தவிர இராணுவம் மற்றும் காவல்துறையினருக்கு சங்கங்கள் இதுவரை அமைத்துக்கொள்ள மத்திய மாநில அரசுகள் அனுமதி அளிக்கவில்லை.

மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் திரு செந்தில் ஆறுமுகம் இதுபற்றிய கருத்துகளை வெளியிட்டுள்ளார் அதன் சாராம்சம் கீழே உங்கள் பார்வைக்கு.

“சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் யாராவது மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளிப்போம்… காவல்துறையினரே சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டால் (புகாரை வாங்க மறுப்பது, விசாரிக்க தாமதிப்பது, லாக்கப்பில் அடிப்பது.) யாரிடம் புகார் அளிப்பது ? அதற்கான தீர்வுதான் காவல்துறை புகார் ஆணையம் (Police Complaints Authority).

அனைத்து மாநிலங்களும் இதை அமைக்க வேண்டும் என்று 1996ல் வழக்குதொடுக்கப்பட்டது. 2006-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை அமைப்பதற்கு சில வழிமுறைகளையும் வகுத்தளித்தது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை (நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட) புறந்தள்ளிவிட்டு, உள்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்த ஆணையமானது பல் இல்லாத ஆணையமாக தமிழக அரசால் 2013 இயற்றப்பட்டது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முற்றிலும் முரணானது என்று மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் திரு.மெளரியா, I.P.S (Rtd) அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் (2020-ல்). இன்றுவரை ஆணையமானது சீரமைக்கப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து இன்றைய ஜூனியர் விகடனில் இரண்டு பக்க கட்டுரை வெளிவந்துள்ளது. மய்ய நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் இக்கட்டுரையை அவசியம் படிக்கவும். காவல்துறை புகார் ஆணையமானது உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அமைக்கப்படுவதற்கு தொடர்ச்சியான முயற்சிகளை முன்னெடுப்போம்…- செந்தில் ஆறுமுகம், மாநில செயலாளர், மக்கள் நீதி மய்யம்.