OMR சாலை, ஆகஸ்ட் 01, 2022

தேர்தல் பரப்புரையின் போது தந்த வாக்குறுதிகளை எளிதாக காற்றில் பறக்க விட்டுவிட்டு ஒன்றிய அரசின் நிர்பந்தத்தால் தமிழக அரசு மின்சார கட்டணங்களை தடாலென உயர்த்தி அறிவித்தார்கள். மேலும் மாதம் ஓர் முறை மின் பயனீட்டு அளவு மேற்கொள்ளப்படும் என்றும் சொன்னதையும் சேர்த்தே காற்றில் பறக்க விட்டார்கள். எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் கழுவும் மீன்களில் நழுவும் மீன்களாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் பதிலும் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒன்றாக இல்லை என்பது வெட்ட வெளிச்சம்.

மக்கள் நீதி மய்யம் தனது தேர்தல் பரப்புரையின் போது கொடுத்த வாக்குறுதிகளை கிட்டத்தட்ட அப்படியே நகலெடுத்து தனதாக சொல்லிக் கொண்ட திமுக வென்றபின் அவைகளை திறம்படச் செய்திருக்க முடியும். ஆனால் சொன்ன அனைத்திலும் 75% சதவிகிதம் வரை செய்துவிட்டதாக செய்திகளில் சொல்லிக்கொள்ளும் ஆளும் கட்சியின் தேர்தல் கால பரப்புரைகள் நடந்து வரும் 1 வருட காலம் கடந்த ஆட்சியில் உரைத்ததும் உரைப்பதும் எல்லாம் பொய்யுரைகள்.

மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சி மக்களுக்காக ஓர் நேர்மையின் நாயகனாக விளங்கும் திரு கமல் ஹாசன் அவர்களது தலைமையை கொண்ட மய்ய நிர்வாகிகள் இத்தகைய மின் கட்டண உயர்வை எதிர்த்தும் அவற்றை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டியும் தமிழக அரசின் கவனம் ஈர்க்கும் வகையில் போராட்டமும் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டமும் சென்னை சோளிங்கநல்லூர் அருகில் திங்கட்கிழமை மாலை சுமார் நான்கு மணியளவில் இளைஞரணி மாநில செயலாளர் திரு கவிஞர் சிநேகன், மாநில செயலாளர் திரு கிருபாகரன் (தகவல் & தொழில்நுட்பம்), காஞ்சி மண்டல செயலாளர் திரு SKP கோபிநாத், நற்பணி பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு நாகராஜன், ஆகியோர் உட்பட ஏராளமான மய்ய உறவுகள் கலந்துகொண்டு ஆளும் திமுக அரசினை எதிர்த்து கோஷங்களும் பதாகைகளும் எழுப்பப்பட்டன.