புது தில்லி அக்டோபர் 16, 2022

நடப்பாண்டு உலக பசி குறியீட்டில், மொத்தமுள்ள 121 நாடுகளில் இந்தியா 107வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைக் காட்டிலும் இந்தியா பின்தங்கியுள்ளது வேதனையளிக்கிறது. இந்தியக் குழந்தைகள் எடை குறைவாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஊட்டச்சத்து பற்றாக்குறை, குழந்தைகளின் வயது, உயரத்துக்கு ஏற்ற வளர்ச்சி இல்லாமை, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவது அவசியம். வறுமையை ஒழிப்பதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதை உலக பசி குறியீடு புள்ளிவிவரங்கள் வலியுறுத்துகின்றன.

இந்தியப் பொருளாதாரம் பட்டொளி வீசிப் பறக்கிறது. நாட்டின் வளர்ச்சி உச்சத்தை தொட்டுவிட்டது என்றெல்லாம் மேற்கொள்ளப்படும் பொய்ப் பரப்புரைகளை நிறுத்திவிட்டு, மக்களின் உண்மை நிலையை உணர்ந்து, பசியைப் போக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டுமென மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. – மக்கள் நீதி மய்யம் அறிக்கை