சென்னை ஜூலை 27, 2022

அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளதை மக்கள் நீதி மய்யம் பாராட்டுகிறது.

காலையில் பசியுடன் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு, குறிப்பாக கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனளிக்கும். மதிய உணவை மட்டுமே நம்பியுள்ள குழந்தைகளுக்கு, காலையிலும் உணவு கிடைக்கச் செய்வதன் மூலம் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அதேசமயம், தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டுமின்றி, அனைத்து வகுப்பு மாணவர்கள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தலாம்.மேலும், சரியான அளவில்,தரமான முறையில் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படுவதை உறுதிசெய்ய உரிய கண்காணிப்பு ஏற்பாடுகளைச் செய்வதும் அவசியம். – இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தனது அறிக்கையின் மூலமாக பாராட்டுதலையும் அதற்கான சில குறிப்புகளையும் தெரிவித்துள்ளது.