கோவை செப்டம்பர் 17, 2022

பெண்கள் இந்த நாட்டின் கண்கள், அவர்களின்றி ஓர் அணுவும் அசையாது. உலகின் இயற்கைப் படைப்புகளில் கோடி கோடி வருடங்களாய் சிறந்து விளங்கும் பெண்கள் என்றுமே சிறப்பு தான்.

ஆண் பெண் பாகுபாடுகள் கண்டதெல்லாம் காலாவதியான ஒன்று, ஆணுக்கு நிகராய் மட்டுமல்ல சில வகைகளில் ஆண்களுக்கும் மேலாக உத்வேகத்துடன் பல துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள் மகளிர். எடுத்துக்காட்டாக சொல்லிட ஒருவர், இவரில்லை வற்றாத நதியொன்று பூமி மீது வளைந்து நெளிந்து நெடுகச் சென்று கொண்டிருக்கும் அல்லவா அதுபோன்று நீண்டு செல்லும் சாதித்த பெண்களின் பட்டியல்.

அப்படி எல்லா துறைகளிலும் பொறுப்புடனும், பொறுமையுடனும், நேர்மையுடனும் நேர்கொண்ட பார்வையுடனும், நெஞ்சுரம் கொண்ட துணிவுடனும் பணியாற்றி தங்களின் பெயர்களை இந்த ஊரும் உலகமும் அறியச்செய்து உரத்து ஒலிக்கச் செய்த மகளிர் பலரை தேர்வு செய்து அவர்களை அழைத்துப் பாராட்டி கூடியிருந்தோர்களுக்கு எடுத்துக்காட்டாக ஒளிரச் செய்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு மகளிர் சாதனையாளர் விருதுகளை பெருமையுடன் அளித்தது, நீதியுடனும் நேர்மையுடனும் வழுவா கொள்கையுடனும் 5 ஆவது ஆண்டிலும் அடியெடுத்து வைத்து வரும் அரசியலில் புது மாற்றமும் பொலிவும் தூய அரசியலை முன்னெடுத்துச் செல்லும் திரு கமல் ஹாசன் அவர்களை தலைவனாகக் கொண்ட மக்கள் நீதி மய்யம்.

இவ்விழாவில் தலைமையேற்று மகளிருக்கு மய்யம் மகளிர் சாதனையாளர் விருதுகளை வழங்கினார் தலைவர் அவர்கள். அப்போது பெருமிதத்துடனும் மகிழ்வுடனும் இந்த விழாவில் பங்கேற்பதாகவும் குறிப்பிட்டு பேசினார். மகளிரை போற்றும் இந்த நிகழ்வை நான் கட்சி சார்பில் நடத்த சம்மதித்ததன் காரணம் பெண்களை சமமாக நடத்திய எனது குடும்பமே முன்னுதாரணம் என்றார். எனக்கு இரண்டு மகள்கள் மட்டும் தான் என்று நினைக்கவில்லை இங்கே கூடியிருக்கும் பெண்களில் இளையவர்கள் பலரும் எனது மகள்களாகவே எண்ணுகிறேன் மேலும் நானும் ஓர் பெண்ணாக பிறந்து இருக்கக் கூடாதா என்றும் யோசித்துள்ளேன் என்று அங்கு வந்திருந்தோர் உள்ளங்கள் நெகிழும்படி உரையாற்றினார் மக்களின் தலைவரான திரு கமல் ஹாசன் அவர்கள்.

மகளிரைப் போற்றிய கோலாகல நிகழ்வு கோவையில் NSK GRAND SPACE இல் சிறப்பாக நடந்தது. இந்நிகழ்வை ஒருங்கிணைத்து அதற்கான ஏற்பாடுகளை திறம்படச் செய்து முடித்த அனைத்து தரப்பு நிர்வாகிகளுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் தனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது மய்யத்தமிழர்கள்.

நன்றி : மக்கள் நீதி மய்யம் யூ டியுப் சேனல்
மய்யத்தமிழர்கள் – யூ டியூப் சேனல்
மய்யம் மகளிர் சாதனையாளர் விருது பெற்ற சகோதரி ரோஸ் ஜார்ஜ் அவர்கள் நம்மவரை மற்றும் ம.நீ.ம நிர்வாகிகள் அனைவருக்கும் தம் உள மகிழ்வை நன்றியை தெரிவித்தார்.