சென்னை, செப்டம்பர் 07, 2022

மத்திய அரசான பிஜேபி ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு செய்தியாக இந்நாட்டு மக்களுக்கு நமது பிரதமர் சொல்லிக் கொண்டிருப்பார். அப்படி இப்போது அவர் கையில் எடுத்திருப்பது ஊழல் ஒழிப்பு எனும் பிரகடனம்.

தமிழகத்தில் 2011 இல் இருந்து 2021 வரை ஆட்சியில் இருந்த அதிமுக கட்சி. 2016 ஆண்டில் மறைந்த ஜெயலலிதா விற்கு பிறகு சரியான தலைமை இல்லாத அக்கட்சி தள்ளாட்டம் கண்டது. இரட்டைத் தலைமை தொடர்பாக தொடர்ந்து நடந்து வந்த சர்ச்சையில் ஆட்சியை சரிவர நடத்தாமல் கிடைத்ததை எல்லாம் சுருட்டத் துவங்கியது ஒரு கும்பல். பல திட்டங்களில் முறைகேடுகள், டெண்டர்களில் ஒழுங்கீனங்கள் கருப்புப் பட்டியலில் இடப்பட்ட பிறகும் அதே நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல்கள் என பல புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது இதனை பொதுநல அமைப்பு ஒன்றும் பகிரங்கமாக அறிவித்தது. ஆயினும் இதுவரை இந்த புகார்களின் மீதான விசாரணையும் நடைபெறாமல் இருந்தது. பலதரப்பட்ட அழுத்தங்களுக்கு பிறகு டெண்டல் ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிமுகவின் முன்னாள் அமைச்சரான எஸ்.பி வேலுமணி சார்பில் வாதாட ஆஜராகும் மத்திய அரசின் வழக்கறிஞர் வருமான வரித்துறைக்காக வாதாடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இருந்து நாம் அறிவது என்னவெனில் ஊழலை ஒழிப்போம் என்று உரைத்த சூளுரையை இருட்டடிப்பு செய்வதாய் அமைகிறது இந்த வழக்காட ஆஜர் ஆவது.

“டெண்டர் ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்காக மத்திய அரசின் வழக்கறிஞர்(Additional Solicitor General) வாதாடுவது தார்மீக அடிப்படையில் நியாயமில்லை. அமைச்சர் வீடுகளில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை குறித்தான வழக்குகளில் வருமானவரித்துறைக்காக வாதிடும் வழக்கறிஞர் ஒருவர் அமைச்சருக்கு ஆதரவாக வாதாடுவது முரண்பாடான நிலைப்பாடாகும். இதற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது, பாஜக அரசின் ஊழல் ஒழிப்பு நிலைப்பாட்டை தோலுரித்துக் காட்டுவதாக உள்ளது. இந்த அனுமதியை மத்திய அரசு திரும்பப்பெறவேண்டும் மேலும், அனைத்து வழக்குகளிலும் எதிர்கட்சியினர், கூட்டணிக்கட்சியினர் என்ற பாகுபாடு இல்லாமல் “நீதியின் பாதையில்” வழக்குகள் நடத்தப்படுவதை மத்திய அரசு உறுதிசெய்யவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. – மக்கள் நீதி மய்யம் அறிக்கை 07.09.2022