மதுரை ஏப்ரல் 20, 2022

பெரும் மாணவர்களை உருவாக்கிட முனைந்து அவர்களும் பசியுடன் கல்வி கற்க முடியாது என்பதை உணர்ந்து உணவும் தந்து படிக்கச் செய்த பெருந்தலைவர் முன்னாள் முதல்வர் காமராஜர் ஐயா நினைவைப் போற்றும் வகையில் அவருடைய பெயரில் மதுரையில் இயங்கி வரும் காமராஜர் பல்கலைக்கழகம் நிர்வாகம் அங்கே தினக்கூலி அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள், எல்க்டிரிஷியன்கள், வாகன ஓட்டுனர்கள், கணிபொறி மென்பொறியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த 136 தொகுப்பூதிய மற்றும் தினக்கூலி பணியாளர்கள் ஆகியோரை அந்தந்த துறை தலைவர்களின் வாய்மொழி உத்தரவின் காரணமாக திடீரென 08.04.2022 அன்று பணி நீக்கம் செய்தது பெரும் தவறான ஒன்றாகும் மற்றும் சற்றும் மனிதாபினமற்ற செயலாகவே கருத முடியும்.

மேலும் பணியிழந்த பலரும் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதிய மற்றும் தினக்கூலி அட்டவணையில் பணிபுரிந்து வந்தவர்கள் எனத் தெரியவருகிறது. இத்தனை ஆண்டுகளாக பலகலைகழகத்தில் மட்டுமே பணிபுரிந்து வந்தவர்கள் நேரம் காலம் பாராமல் தமது மிகக்கடுமையான உழைப்பைத் தந்தவர்களை பணி நீக்கம் செய்து வீதியில் நிற்கும்படி செய்துள்ளது ஒப்புக்கொள்ளமுடியாத ஒன்று.

மிக சொற்ப சம்பளத்தில் பணிபுரிந்து வந்தவர்களின் வயிற்றில் அடித்தது மிகக்கடுமையான மன உளைச்சலைத் தந்தது அது மட்டுமில்லாமல் தற்போது பணியிழந்து நிற்பவர்களில் பெரும்பாலோனோர் சரியான கல்வித்தகுதியுடைய பணியாளர்கள் தங்களது சிறப்பான பங்களிப்பினை தொடர்ந்து தந்து கொண்டிருந்தாலும் இப்போது பணியில் தொடர்பவர்கள் முறையான கல்வித்தகுதி இல்லாமல் போனாலும் முன்னதாக பணியில் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்தில் பணியினை தொடர்ச் செய்வது முறையற்ற செயலாகும்.

இவர்களது வருமானத்தை நம்பி மட்டுமே அவர்களின் குடும்பத்தினர் நலன், குழந்தைகளின் கல்வி மற்றும் அத்தியாவசிய தேவைகளும் கருத்தில் கொண்டிருக்க வேண்டியது அரசின் தலையாய கடமை ஆகும். எந்த வகையான முன்னறிவிப்பும், எழுத்துப்பூர்வமாக ஆணையும் இல்லாமல் திடீரென பணி நீக்கம் செய்ததை தமிழக அரசின் சம்பந்தப்பட்ட துறை தலையிட்டு பணி இழந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த பணி நீக்கத்தை நிறுத்தி வைத்து அவர்களுக்கான நல்ல தீர்வை தர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.

மக்கள் நீதி மய்யம் இளைஞர் அணி மாநில செயலாளர் திரு கவிஞர் சினேகன் மற்றும் மதுரை மாவட்டம் செயலாளர் திரு அழகர் குழுவினர் போராட்டம் நடக்கும் பல்கலைக்கழக வளாகம் சென்று மய்யம் ஆதரவளிப்பதை பற்றி விளக்கிக் கூறி பின்னர் தற்கொலை செய்துகொள்ள முற்பட்ட மாற்றுத்திறனாளிகளை பேசி நம்பிக்கையை வளர்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.