சென்னை ஜூலை 20, 2022

தேர்தல் பரப்புரையின் போது கொடுத்த வாக்குகளை பற்றி கொஞ்சமும் கவலையில்லை ஆளும் கட்சியினருக்கு. நீட் தேர்வு விலக்கு தான் முதல் கையெழுத்து என்றார்கள் ஆயிற்று பதினான்கு மாதங்கள் ஓடியும் நீட் தேர்வு ரத்து செய்வதை பற்றி கண்ணுக்கெட்டிய வரை எந்த அறிகுறியும் தென்படவில்லை.

அதே போன்று இன்னுமொரு வாக்கு மின்சார கட்டணங்கள் இனி மாதா மாதம் கணக்கிடப்படும் என்றும் சொன்னது கிடப்பில் போச்சு. நேற்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் அறிவிப்பு மின்சார கணக்கீடு செய்து தொகையை பதிக்கும் மின் அட்டையை தொட்டாலே ஷாக்கடிக்கும் வகையில் மின்சார பயன்பாட்டிற்கு ஏற்ப குறிப்பிட்ட தொகையை உயர்த்தி இருக்கிறார். இதற்கு அவர் சொல்லும் காரணம் “ஒன்றிய அரசின் நிர்பந்தமே இந்த விலை மாற்றத்திற்கு காரணம் ஏன் என்றால் தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தாவிடில் மத்திய தொகுப்பில் இருந்து தரப்படும் மானியமும் ரத்து செய்யப்படும் என்றும் அது மட்டுமில்லாது தமிழக அரசுக்கு கடனாக எந்த தொகையும் அளிக்கப்படக்கூடாது என்றும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசு தடை போட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது திமுக அரசானது செய்வோம் என்று சொல்லும், ஆனால் சொன்னதை செய்யாது, செய்யாமல் இருப்பதற்கு ஒன்றுக்கும் ஒப்புக்கொள்ள முடியாத ஓர் காரணத்தை தேடிப்பிடித்து சொல்லும். இது தான் அவர்கள் தருவதாக சொன்ன விடியல்.

இந்த மின் கட்டண உயர்வை அதுவும் நடுத்தர வர்க்கத்தினரையும் அதற்கும் கீழாக மிகுந்த ஏழ்மையான நிலையில் குடும்பம் நடத்தும் மக்களையும் பெரிதளவில் பாதிக்கும் இந்த மின் கட்டண விலையேற்றம் நிச்சயம் ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று எனவும் தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது.

தேர்தலுக்கு முன்னாடி ஒன்னு சொல்லுவோம், ஜெயிச்சதுக்கு அப்புறம் ஒன்னு செய்யுவோம் என ரெட்டை வேடம் போடும் திமுகவை தோலுரிக்கும் – மக்கள் நீதி மய்யம், திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டச் செயலாளர் திரு பாசில் அவர்களின் அனல் தெறிக்கும் வாதங்கள்”

திமுகவின் வாக்குறுதி எண்.221 மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற வாக்குறுதியைபற்றி அமைச்சர் ஏன் பேசவில்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்களில் கூட வரி விதித்து மக்களை வஞ்சிக்கும் பாஜகவை போலவே எந்தவகையிலும் சளைத்தவர்கள் இல்லை என நிரூபிக்கிறது திமுகவும். – திரு பாசில்