ஈரோடு, செப்டெம்பர் 21, 2022

தேர்தல் சமையங்களில் அது பாராளுமன்றம் அல்லது சட்டமன்றம் என எதுவாக இருந்தாலும் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் அவர்கள் சார்ந்து நிற்கும் கட்சி புள்ளிகள் ஒவ்வொரு ஊரின் சந்து போனதெல்லாம் சளைக்காமல் புகுந்து புறப்படுவார்கள் வாக்குகளை சேகரிக்க பணம் தரும் நேரங்கள் என்றால் இண்டு இடுக்குகள் கூட விடாமல் வாக்களர்களை விடாமல் விரட்டிப் பிடிப்பார்கள் விட்டால் கால்களில் கூட விழுந்து எந்திரிப்பார்கள் அது குழந்தையாக இருந்தாலும் சரி தொண்டு கிழமாக இருந்தாலும் சரி இதையே எழுதப்படாத நியதியாக கடைபிடித்து வருகிறார்கள்.

இதெல்லாம் ஜெயிக்கிற வரை தான் ஜெயித்து ஆட்சியில் அமர்ந்த பின்னர் கொடுத்த வாக்குகள் எல்லாம் காற்றில் பறக்கும்.

நகரங்களில், கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள் அரசு போக்குவரத்தின் மூலமாகவோ அல்லது சொந்த வாகனங்களிலோ பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வரலாம். ஆனால் மலைவாழ் மக்களின் நிலையோ மிகுந்த பரிதாபத்தை உண்டாக்கக்கூடிய அதேசமயம் பொதுநலனை கருதும் ஒவ்வொருவருக்கும் கோபத்தையும் வரவழைக்கும். மலைவாழ் மக்களின் கல்வித்தேவைகள் பூர்த்தி செய்வது பெரும் சவாலான ஒன்று. சரியான சாலை வசதிகள் எதுவும் கிடையாது, அவர்கள் வசிக்கும் இடத்தில இருந்து பல மைல்களுக்கு அப்பால் இயங்கும் பள்ளிக்கூடங்கள் என எந்தவித கட்டமைப்புகள் இல்லாமல் பெரும் சிரமங்களுக்கு இடையில் கல்வி கற்பதற்கு விருப்பம் இல்லாமல் போய்விடும் அபாயமும் உண்டு.

அப்படி பல மலை கிராமங்களில் பூர்விகமாக வசித்துவரும் மலைவாழ் மக்களின் கல்விதரம் உயர்ந்தால் மட்டுமே அவர்களது வாழ்க்கைதரம் உயரும். பண்டைய காலங்களில் கைரேகை பதித்து வரும் மக்கள் என்றைக்கு முழுதாக கல்வி கற்க முற்படுகிறார்களோ அன்றைக்கு அவர்களது அறியாமை இருள் விலகக் கூடும்.

எந்த வித சாலை வசதிகளும் இல்லாமல் இருக்கும் கிராமங்களைச் சார்ந்த குழந்தைகள் கல்வி கற்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள மலை கிராமங்களில் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் ஏராளமான மாணவ மாணவிகள் பாதியிலேயே வெளியேறும் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.

ஈரோடு மாவட்டத்துக்கு உட்பட்ட சத்தியமங்கலம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் அமைந்துள்ள மலைக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் கொரொனோ தொற்றுக்கு பிறகு பள்ளிக்குத் திரும்பவில்லை, போதுமான போக்குவரத்து வசதியின்மையே பள்ளி இடைநிற்றலுக்கு காரணம் என ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. சத்தியமங்கலம் பகுதிக்குட்பட்ட குன்றிமலைப் பகுதியில் செயல்படும் குஜ்ஜம்பாளையம் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 102 குழந்தைகள் ஏறத்தாழ 8 கிலோமீட்டர் தொலைவு நடந்து வந்தால் தான் பள்ளியை அடைய முடியும். இதே போல் அந்தியூர் வட்டாரம் கொங்காடை மலைப்பகுதியில் 110 குழந்தைகள் அடர்ந்த வனப்பகுதியில் தினமும் 10 கிலோமீட்டர் பயணம் செய்து ஒரு பள்ளியை சென்றடைகின்றனர்.

இப்படி எந்த விதமான போக்குவரத்து வசதியுமின்றி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று வருவது யானைகள் உட்பட பல வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பாதைகளில் கால்நடையாக பயணிப்பது குழந்தைகளுக்கு உயிருக்கு உத்திரவாதமற்ற நிலை. இப்படி பாதுகாப்பற்ற பயணத்தினால் உண்டாகும் இழப்பினை உணர்ந்து பள்ளிகளுக்கு செல்வதை தவிர்த்து இடைநிற்றலில் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனைக்குரியது.

அனைவருக்கும் இலவசக்கல்வி என்பது கட்டாயமாகிறது அதற்கென அனைத்துப்பகுதிகளும் பள்ளிகள் துவக்கப்பட வேண்டும் என கல்விச்சட்டம் வலியுறுத்துகிறது.

தமிழகத்தின் மலைப்பகுதிகளையொட்டிய பெரும்பாலான கிராமங்களுக்கு பேருந்து வசதிகள் கிடையாது. இதனால் மாணவ மாணவிகள் பள்ளிக்குச் பல்வேறு இடையூறுகள் உள்ளன. பாதுகாப்பற்ற சூழலில் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி இருப்பதால் பள்ளிக்குச் செல்வதை தவிர்க்கின்றனர்.

குறிப்பாக மலைவாழ் மற்றும் பழங்குடியினர் மாணவ மாணவியர் கல்வி கற்பதற்கு இது தடையாக உள்ளது. எனவே மலைக்கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு சாலை மற்றும் பேருந்து வசதி செய்து கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். பள்ளிகுழந்தைகளின் இடைநிற்றலைத் தடுத்து அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்பதை உறுதிபடுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

மக்கள் நீதி மய்யம் – மாணவரணி மாநில செயலாளர் திரு ராகேஷ் ராஜசேகரன் அவர்களின் அறிக்கை உங்களின் பார்வைக்கு

https://www.bbc.com/tamil/india-59318155