உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் தலைவர், தங்களால் சட்ட விதிகளுக்குட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதைத் தான் சொல்ல முடியும் செய்யவும் முடியும், நாங்கள் பெரிய வியாபாரம் பண்ணவில்லை அதனால் பெரிய பொய் சொல்ல மாட்டோம் என்று பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் பேசியதாவது :-

பிற கட்சிகள் செய்ய முடியாததை மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் செய்வார்கள் எனவும், பிற வேட்பாளர்கள் செய்வதை இவர்கள் செய்ய மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

தனியார் நிறுவனமான சூயஸ் திட்டத்தில் சிறுவாணி ஆற்று தண்ணீரை விற்கக்கூடாது என சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியவர்கள் தங்கள் கட்சி ஆட்சியில் அமர்ந்ததும் அத்திட்டத்தை செயல்படுத்த முடுக்கிவிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த ஊழல் மலிந்த ஆட்சியில் கொசுக்கள் மட்டுமே சந்தோஷமாக வாழ்வதாக உணரப்படுகிறது என்றும் கூறியவர் தமது கட்சியின் வேட்பாளர்கள் பலர் தத்தமது கடமையை சரிவர செய்யவில்லை என்றால் தாம் வகிக்கும் பதவியை விட்டு விலகிவிடுவோம் என எழுதிக் கொடுத்து வாக்கு சேகரித்து வருவதாக சொல்லியவர், தங்களால் என்ன முடியுமோ அதற்கான உதவியை மக்கள் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தங்களின் மய்ய வேட்பாளர்கள் மாதந்தோறும் உள்ளாட்சி நிர்வாகத்தில் என்னென்ன பணிகள் நடைபெற்றது என ரிபோர்ட் கார்டு கொடுப்பார்கள், அதே போல் மற்ற வேட்பாளர்கள் எந்த ஒளிவுமறைவின்றி செய்வார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.