சென்னை : ஜூலை 06, 2024

இந்தியாவின் முக்கிய தேசிய கட்சிகளில் ஒன்றான பகுஜன் சமாஜ் பார்ட்டியின் தமிழ்நாடு மாநில தலைவரான திரு.K.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் உரையாடிக்கொண்டு இருந்த போது அங்கு வந்த கூலிப்படையினரின் கொடூர தாக்குதலில் கொல்லப்பட்டார். குறிப்பாக பெரும் மக்களின் நடமாட்டம் உள்ள நகரின் முக்கியப் பகுதியான பெரம்பூரில் அமைந்துள்ள அவரது வீட்டினருகே இந்த கொடூரச் செயல் அரங்கேறியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அறிந்த மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலையும் கூடவே ஆம்ஸ்ட்ராங் அவர்களை கொன்ற கொலையாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

“பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவரது மறைவு பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பாகும். ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.”திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்